ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்பு
Namakkal news- ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால் குட ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
Namakkal news, Namakkal news today- ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால் குட ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை கடந்த ஏப். 23ஆம் தேதி இரவு பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி திங்கட்கிழமை முதல் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாரியம்மனுக்கு இரவு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது. அதேபோல் ஆனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் தினமும் காலையில் புனித நீராடி தீர்க்கக்குடம் கொண்டு வந்து தீர்த்தத்தை கோயில் வளாகத்தில் நடப்பட்டிருந்த கம்பத்திற்கு ஊற்றி சுவாமி தரிசனம் செய்து வந்தனர். காலையில், கோயில் பூசாரி தீச்சட்டி எடுத்து கோயிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இன்று புதன்கிழமை காலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேள தாளங்கள் முழங்க பால்குடம் மற்றும் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு செல்லாண்டியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றனர். அங்கு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் ஊர்வலமாக மாரியம்மன் கோயிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாரியம்மனுக்கு தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மன் முன் படையல் போட்டு பொங்கல் பூஜையும், அதனைத் தொடர்ந்து இரவு பெண்கள் மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வந்து மாவிளக்கு பூஜையும் செய்கின்றனர். இரவு வான வேடிக்கை நடைபெறுகிறது. நாளை அதிகாலை 5மணி அளவில் மாரியம்மன் கோயிலில் கம்பம் பிடுங்கி காவிரி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மாலை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.