நாமக்கல்லில் ஆட்சி மொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியை டிஆர்ஓ துவக்கி வைத்தார்.

Update: 2023-03-07 10:15 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற ஆட்சிமொழி சட்ட விழிப்புணர்வு வார விழா பேரணியில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளை நினைவுகூறும் வகையில், ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மார்ச் 1 ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஒரு வாரம் ஆட்சிமொழிச் சட்ட வார விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கம்ப்யூட்டர் தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், தமிழில் வரைவுகள், குறிப்புகள், செயல்முறை உத்தரவுகள் தயாரித்தல், அரசு உத்தரவுகள், ஆட்சிமொழி ஆய்வும் குறைகளையும், மொழிப்பயிற்சி, மொழிபெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும் குறித்து பயிற்சி வகுப்புகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைத்தல் தொடர்பான கூட்டம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஆட்சிமொழிச்சட்டம் பற்றிய விழிப்புணர்வு பட்டிமன்றம் ஆகியன நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் ஆட்சி மொழி குறித்த விழிப்பணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியில் 200 -க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும், ஆட்சி மொழி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்களை டிஆர்ஓ வழங்கினார். பின்னர் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கு டிஆர்ஓ சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளார் சிவசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) ஜோதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News