நாமக்கல் அரசு மருத்துவமனையில் இளம்பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் உயிரிழந்தார்; அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-10-05 00:30 GMT

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே உள்ள ஏ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் நந்தினி (30). 3 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினிக்கும், திருச்சி மாவட்டம் நாகை நல்லூரைச் சேர்ந்த முருகவேல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடந்த 29-ந் தேதி நந்தினி உடல்நலக்குறைவால் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பதிரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நந்தினி திடீரென உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும், ஆஸ்பத்திரி முன்பு திரண்ட, நந்தினியின் உறவினர்கள், நந்தினியை அவரது கணவர் முருகவேல் மற்றும் மாமியார் தாக்கியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறினார். 

அத்துடன், அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, நாமக்கல் ஆஸ்பத்திரி முன்பு ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாமக்கல் - மோகனூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News