சேந்தமங்கலம் அருகே 3ம் தேதி ஜல்லிக்கட்டு: மைதானத்தை கலெக்டர், எஸ்.பி ஆய்வு

சேந்தமங்கலம் அருகே வரும் 3ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானத்தை கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2023-02-28 10:15 GMT

ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தை, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஜங்களாபுரத்தில், வருகிற 3ம் தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்கிறார். இதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளதையும், ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளதையும், ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில், இரும்பு தடுப்பு பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளதையும், காளைகள் வெளியேறும் இடத்தில், மைதானத்தை சுற்றிலும் இரண்டுடடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, காளைகளை உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டார்கள்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதையும், மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும், ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில், பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுவரும் பணியினையும், ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதற்கு தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும், பார்வையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கும் தனியாக இடம் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையும், பார்வையிட்டார்கள்.

மேலும், ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாதுகாப்பாக தேங்காய்நார் சரியான முறையில் பரப்ப வேண்டும் என்றும், தேவையான ஒலிபெருக்கி அமைப்புகள் ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தினார்கள். நிகழ்ச்சியில், நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News