மாணவிகளை செல்போனில் படம் பிடித்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை, செல்போனில் ஆபாச படம் எடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

Update: 2023-04-13 02:45 GMT

கீரம்பூர் அரசு பள்ளியில், மாணவிகளை செல்போனில் படம் பிடித்த, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திரளான பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். (உள்படம் : ஆசிரியர் பன்னீர்செல்வம்)

கீரம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளை, செல்போனில் ஆபாச படம் எடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுக்கா, கீரம்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பன்னீர்செல்வம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளை செல்போனில் ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்து, தரக்குறைவாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆசிரியரின் செயல் குறித்து தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர். அங்கு அவர்கள், ஆசிரியர் பன்னீர்செல்வத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டடனர். இதையொட்டி, பள்ளி தலைமை ஆசிரியை சர்மிளா, ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பாதுகாப்பு கருதி அங்குள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு பரமத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

பரமத்தி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து அந்த பள்ளிக்கு வந்த நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் எஸ்.பி மணிமாறன், பரமத்திவேலூர் டிஎஸ்பி கலையரசன் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் பள்ளியில், பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பெற்றோர்கள் ஆசிரியர் பன்னீர் செல்வத்தின் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட கலெக்டர், கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவேண்டும் எனக்கூறி சம்பந்தப்பட்ட ஆசிரியரை பரமத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல விடாமல் தடுத்து பள்ளியின் கேட்டை இழுத்து மூடி மறியல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஆசிரியர் பன்னீர்செல்வத்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். அதன்பிறகு பெற்றோர்கள் ஆசிரியரை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தை வெளியே செல்ல வழி விட்டனர். மாணவிகளை ஆபாசமாக படம் மற்றும் வீடியோ எடுத்ததுடன், தரக்குறைவாக பேசியதாகவும், ஆசிரியர் பன்னீர் செல்வம் மீது, பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறுகையில், ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன், விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த சம்பவம் கீரம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News