முன்னாள் அமைச்சர் சரோஜா தனது கணவருடன் மாவட்ட குற்றப்பிரிவில் கையொப்பம்

மோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள, அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையொப்பமிட்டனர்.

Update: 2022-04-23 11:00 GMT

அரசு வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில், நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள, அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையொப்பமிட்டனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன் (65). இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீது ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் பண மோசடி புகார் அளித்தார்.

புகாரில் சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 15 பேர் தன்னிடம் ரூ. 76.50 லட்சம் பணம் அளித்தாகவும், அந்த பணத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் சரோஜா, வேலை வாங்கித்தராமல் மோசடி செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் தொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சனும் கடந்த சில தினங்களுக்கு முன் ராசிபுரம் ஜேஎம் கோர்ட்டில் சரணடைந்து நிபந்தனை ஜாமீன் பெற்றனர். அப்போது இருவரும் மறு உத்திரவு வரும் வரை வாரந்தோறும் சனிக்கிழமை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என உத்திரவிட்டப்பட்டது.

இதையொட்டி, இன்று சனிக்கிழமை முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர், மாவட்ட எஸ்.பி ஆபீஸ் வளாகத்தில் உள்ள, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு வருகை தந்து கையொப்பமிட்டு திரும்பிச் சென்றனர்.

Tags:    

Similar News