கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவ மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிதி உதவி வழங்கினார்.

Update: 2022-06-28 11:15 GMT

நாமக்கல் மாவட்டத்தில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவியை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 229 மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர் அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில், கொரோனாவால் பெற்றோரை இழந்த 23 குழந்தைகளுக்கு ஏகம் அறக்கட்டளை சார்பில், தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2.30 லட்சம் கல்வி உதவித்தொகையை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதில் 20 குழந்தைகள் தனியார் பள்ளியிலும், 3 குழந்தைகள் தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டும் படித்து வருகின்றனர். பெற்றோரை இழந்து வறுமையில் வாழ்ந்து வரும் இக்குழந்தைகளின் கல்வி தடைபடாமல் இருப்பதற்காக தமிழக முதல்வர் ஏற்கனவே ஒவ்வொரு ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஆர்ஓ கதிரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட சப் கலெக்டர் தேவிகாராணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், பாதுகாப்பு அலுவலர் சவுண்டேஸ்வரி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News