நாமக்கல் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 75 பேருக்கு கொரோனா

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-01-22 12:45 GMT
பைல் படம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 3வது அலை மற்றும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 28,000 பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் வேகமாக பரவி நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பணிபுரியும், 7 டாக்டர்கள், 3 நர்சுகள், ஒரு தொழில் நுட்ப உதவியாளர் என 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், மாவட்டத்தில் உள்ள 8 அரசு ஆஸ்பத்திரிகள், 63 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனாவின் முதல் அலை, இரண்டாவது அலையில் ஏற்பட்ட பாதிப்புகளை விட தற்போது பாதிப்பு குறைவாக உள்ளதாலும், உயிரிழப்புகள் அதிகம் இல்லாததும், பொதுமக்களுக்கு சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது.

Tags:    

Similar News