ஈரோடு கிழக்கு தொகுதியில் 30,000 ஓட்டு வித்தியாசத்தில் காங்., வெற்றி: ஈஸ்வரன்

ஈரோடு கிழக்கு தொகுதியில் 30,000 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-28 00:45 GMT

ஈஸ்வரன்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்வேட்பாளர் இளங்கோவன் 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ கூறினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கொமதேக பொது செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈஸ்வரன் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் குறித்துப் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கொமதேக தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளின் காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது. கொமதேக சிறப்பாக களப்பணியாற்றி கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம்.

இரட்டை இலை சின்னத்தை பெற இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் இருவரும் கையெழுத்திட்டு சின்னத்தை வாங்கினால் கோர்ட்டில் உள்ள வழக்கு நீர்த்து போகும் என்பதை புரிந்து கொண்டு இ.பி.எஸ் அதை தவிர்த்து வருகிறார். மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பார் என்பது ஏற்கனவே கணித்தது தான், காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தியின் நடைப்பயணத்தில் அவர் பங்கேற்ற போதே இது தெரிந்ததுதான்.

நாமக்கல் மாவட்டம் பரளி, வளையப்பட்டி, லத்துவாடி உள்ளிட்ட பகுதியில் உள்ள 220 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தி சிப்காட் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, விவசாயிகளின் எதிர்ப்பை மீறி தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தாது என தமிழக அரசு தீர்க்கமாக இருக்கின்றது.

தொழில்துறை அமைச்சர் சட்டசபையில் வாக்குறுதி அளித்துள்ளார். விவசாயிகளின் ஒப்புதல் கருத்துக்களை கேட்காமல் தொழிற்சாலைகளுக்கான நிலம் கையகப்படுத்தும் வேலைகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வாய்ப்பில்லை. எனவே நாமக்கல் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கத்தினர் அச்சப்படத் தேவையில்லை என அவர் கூறினார்.

Tags:    

Similar News