தென்னையில் கூடுதல் மகசூல் பெற வேளாண்மைத்துறை ஆலோசனை

தென்னையில் கூடுதல் மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

Update: 2023-05-13 02:15 GMT

பைல் படம்

தென்னையில் கூடுதல் மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண்மைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு வட்டாரங்களில், 11 ஆயிரத்து 46 எக்டர் பரப்பளவில், தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மோகனூர், கபிலர்மலை, பரமத்தி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, திருச்செங்கோடு, நாமகிரிப்பேட்டை ஆகிய வட்டாரங்களில், அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தென்னையில் கூடுதல் மகசூல் பெற, நுண்ணூட்ட கலவை உரம் இடுதல் அவசியம். தென்னை நுண்ணூட்ட கலவை உரத்தில், துத்தநாகசத்து (5 சதவீதம்), இரும்புச்சத்து (3.80), மேங்கனீசு சத்து (4.8), போரான் (1.6) மற்றும் தாமிரசத்து (0.05) என்ற விகிதத்தில் உள்ளது. இரும்புச்சத்தானது, தென்னை இலையில் பச்சையம் உருவாவதற்கு நடக்கும் வினையிலும், பயிர் வளர்சிதை மாற்றங்களில் ஈடுபடும் பல்வேறு என்சைம்கள் எனப்படும் நொதிப்பான்கள் உருவாவதிலும், அதனை இயக்குவதிலும் உறுதுணை புரிகின்றது.

மேங்கனீசு சத்தானது, மண்ணில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்களை, தென்னை எடுத்துக் கொள்ள உறுதுணை புரிகின்றது. போரான் சத்து தென்னை இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கும், குரும்பை உதிர்வதை தடுக்கிறது. தாமிர சத்தானது, தென்னையில் ஒளிச்சேர்க்கை நடக்கும் வினையிலும், நொதிப்பான்களை உருவாக்குவதிலும், பச்சையம் தயாரிப்பிலும், அதிக எண்ணிக்கையில் காய்கள் உருவாவதற்கும் உதவி புரிகின்றது.

விவசாயிகள், தென்னை நுண்ணூட்ட கலவை உரத்தை, மரம் ஒன்றிற்கு, ஒரு கிலோ வீதம், 50 கிலோ தொழுஉரத்துடன் கலந்து ஆண்டுக்கு ஒரு முறை இட வேண்டும். தென்னையில் நுண்ணூட்ட கலவை உரம் இடுவதால், குரும்பை உதிர்வது தடுக்கப்பட்டு, அதிகமான காய்கள் பிடிக்க உறுதுணை புரிகின்றது. அதனால், நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி, தென்னை விவசாயிகள் அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News