மதுரை பகுதியில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக பெருகி வரும் சுவரொட்டிகள்
Posters proliferating in support of O. Panneerselvam in Madurai
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஓபிஎஸ்-க்கு பெருகிவரும் ஆதரவு போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் பத்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றுதிமுக ஆட்சி அமைத்த போதும் மதுரை மாவட்டத்தில் மட்டும் அதிமுக 5 தொகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில் ஒற்றை தலைமை பிரச்னையால் அதிமுக தலைமைக் கழகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு பிரிவாக யுத்தம் நடத்தி வரும் இந்நிலையில் மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், மற்றும் மாவட்டச்செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் இபிஎஸ் -க்கு ஆதரவு நிலை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் ஆதரவாக இருந்த மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட நிர்வாகிகள் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர். மேலும் அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல் செல்லூர் கே. ராஜு எம்எல்ஏ-வாக இருந்து வரும் மதுரை மேற்கு தொகுதிக்குள்பட்ட கீழமாத்தூர் ஊராட்சியில் கிளை கழக நிர்வாகிகள் சாகுல்ஹமீது தலைமையில் ஓபிஎஸ் அணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து அது சம்பந்தமான சுவரொட்டியை கிராமம் முழுவதும் ஒட்டி உள்ளனர். மேலும் இவர்கள் கூறுகையில், தங்களைப் போலவே இன்னும் சிலர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், அடுத்தடுத்த நாட்களில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். அவர்களுக்கு ஆதரவு பெருகும் என்றும் தெரிவித்துள்ளனர்