எத்தனை சோதனை வந்தாலும் அதனை தாங்கிக்கொள்ளும் வலிமையை முதல்வர் அளித்துள்ளார்

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு எத்தனை சோதனைகள் வந்தாலும் எதிர்க்கொள்ளுவோம் என்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி

Update: 2023-05-28 13:30 GMT

 செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெறும் 63வது எல்ஆர்ஜி நாயுடு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து இறுதி போட்டியினை மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,

வருமான வரித்துறை சோதனை நடைபெறும் பல நிறுவனங்கள் நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து செயல்பட்டு வருபவை. அவர்கள் வருமான வரி செலுத்தி வருகிறார்கள். வரி ஏய்ப்பு ஏதும் கண்டறியப்பட்டால் கூடுதல் தொகை செலுத்த தயாராக உள்ளனர். வருமான வரி சோதனை ஒன்றும் புதிதில்லை. சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்கு சேகரிக்கும் போதும் வருமான வரி சோதனை நடைபெற்றது. வரக்கூடிய சூழல்களை கருத்தில் கொண்டு சோதனை நடைபெறுகிறது. இரண்டொரு நாட்களில் சோதனை முழுமையாக நிறைவு பெற்ற பிறகு கூடுதல் வரி, வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டால் அதற்குரிய நடவடிக்கையை எதிர் கொள்ள தயாராக உள்ளோம்.

சோதனையின் போது மத்திய பாதுகாப்பு படையோ, போலீஸாரோ இல்லாமல் வந்ததால் அடையாள அட்டையை காட்டக்கூறியுள்ளனர். போலீஸ், மத்திய பாதுகாப்பு படையினர் வருமான வரித்துறையினருடன் இல்லாததால் வி ரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துவிட்டன என்ற அமைச்சர், தற்போது சோதனைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கக் கூறியுள்ளேன் என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடந்தப்போது சாமியானா பந்தல் போடப்பட்டு உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி எதையும் நாங்கள் செய்யவில்லை. செய்யக்கூடாது என தெரிவித்துள்ளேன். முன்னாள் அமைச்சர் ஜெயகுமார். காமெடி டீவி சானல் மாதிரி என கிண்டல் செய்தார்.

எத்தனை சோதனை வந்தாலும் அதனை தாங்கிக்கொள்ளும் வலிமையை முதல்வர் வழங்கியுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பு எத்தனை 100, 1, 000 சோதனைகள் வந்தாலும் எதிர்க்கொள்ளுவோம். புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றிப்பெறுவோம் என்றார்.

Tags:    

Similar News