கரூர் தொகுதியில் வீட்டிலிருந்தபடியே வாக்களித்த 85 வயது முதியோர்கள்

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் வீட்டிலிருந்தபடியே 85 வயது முதியோர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Update: 2024-04-05 16:21 GMT

கரூர் தொகுதியில் வீட்டில் இருந்த படியே 85 வயது முதியவர் வாக்களித்ததை மாவட்ட ஆட்சியர் தங்கவேலு ஆய்வு செய்தார்.

85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கரூர் எம்.பி, தொகுதியில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், விராலிமலை, மணப்பாறை என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. 04.04.2024 மற்றும் 05.04.2024 ஆகிய இரண்டு நாட்களிலும் விருப்பம் தெரிவித்துள்ள 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் (AVSC) மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் (AVPD) வாக்களிக்க ஏதுவாக, ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் 56 குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் அஞ்சல் வாக்குகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று தகுதியான விருப்பம் தெரிவித்துள்ள வாக்காளர்களிடம் வாக்குகளை பதிவு செய்தபின்னர் பாதுகாப்புடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள தபால்வாக்குகள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்று மூடி முத்திரையிட்டு காவல்துறை மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இன்று கரூர் பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுத்திருக்காம்புலியூர் பகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியினை பார்வையிட்டு அதே பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் அனைத்து விதிமுறைகளும் கடைபிடித்து வாக்களிப்பதை பார்வையிட்டார்.

 கரூர் எம்.பி. தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் (AVSC) 1804-ம். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் (AVPD) 1429-ம் என மொத்தம் 3233 வாக்காளர்கள் வீட்டிலிருந்து படிவம் 12டி மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் நேற்று 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள்721 நபர்களும், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 610 நபர்களும் என மொத்தம் 1331 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 05.04.2024 இன்றும் தொடர்ந்து வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News