6 மாதம் தாய்ப்பால் அவசியம்: சமுதாய வளைகாப்பில் ஆட்சியர் அறிவுரை

கரூரில் சமுதாய வளைகாப்பில் ஆட்சியர் கலந்து கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதம் தாய்ப்பால் அவசியம் என அறிவுறுத்தல்.

Update: 2021-09-16 16:15 GMT

சமுதாய வளைகாப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு மங்கள பொருள்களை வழங்கும் ஆட்சியர்  பிரபுசங்கர்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் இன்று கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ சிவகாமசுந்தரி, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்தனர்.

கர்ப்பிணி பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சேலை, மஞ்சள் கயிறு, மஞ்சள் கிழங்கு, வளையல், சோப்பு, பூ ஆகியவை வழங்கினார்.  இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 1250 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்கள் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்,   மங்களகரமான, மகிழ்ச்சி அளிக்க கூடிய இந்த விழா வேறு எந்த நாட்டிலும் இல்லாத விழா. அதுவும் அரசே ஏற்று நடத்துகிறது. எந்த மாவட்டத்திவம் இல்லாத வகையில் அமைச்சர் அனைவருக்கும் புடவை அளித்துள்ளார். மரக்கன்று, விதைப்பந்து ஆகியவை வழங்கியுள்ளார்.

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து அவசியமானது. குறிப்பாக இரும்பு சத்து மிக அவசியம். அது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை, பழங்கள் சாப்பிட வேண்டும். அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவை செய்து வருகின்றனர். மருத்துவமனையில் தான் பிரசவம் பார்க்க வேண்டும். குழந்தை பிறந்தவுடன் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும். பிறந்த குழந்தைக்கு சீம்பால் அவசியம். முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும். தாய்பால் தவிர 6 மாதத்திற்கு எதுவும் கொடுக்க கூடாது.

ஆட்சியராக அல்ல மருத்துவம் படித்த மருந்துவராக அறிவுரை கூறுகிறேன்.  குழந்தை பிறந்து படிக்க வைத்து வேலைக்கு அனுப்பிய பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். சிறிய மாவட்டமாக இருந்தாலும் குழந்தைகள் திருமணம் அதிக அளவில் நடைபெறும் மாவட்டங்களில் நமது மாவட்டமும் ஒன்று என்பது வருத்தமாக உள்ளது என்றார்.

Tags:    

Similar News