சங்கரா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு தனியார் நிறுவனம் ரூ.1 கோடி நன்கொடை
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆப்டஸ் வேல்யு வீட்டு வசதி நிறுவனம் இந்த நன்கொடையை வழங்கி உள்ளது.
கல்வி,மருத்துவம் மற்றும் சமுதாய மேம்பாட்டுச் சேவைகளை மேலும் சிறப்பாக செய்ய காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளைக்கு ரூ.ஒரு கோடி நன்கொடையாக சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கியது.
சென்னை கீழ்ப்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆப்டஸ் வேல்யூ வீட்டு வசதி நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் செயல் தலைவர் எம்.ஆனந்தன்,நிர்வாக இயக்குநர் பி.பாலாஜி, துணைத் தலைவர் என்.ஸ்ரீகாந்த் ஆகியோர் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவர் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளைக்கு ரூ.ஒரு கோடி நன்கொடையை காசோலையாக வழங்கினார்கள். இத்தொகையினை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் பெற்றுக்கொண்டார்.
இத்தொகையானது காஞ்சி காமகோடி பீட அறக்கட்டளை செய்து வரும் கல்வி,மருத்துவம் மற்றும் சமுதாய மேம்பாட்டு சேவைகளை மேலும் சிறப்பாக செய்வதற்காக நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் எம்.ஆனந்தன் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசனும் உடன் இருந்தார்.