காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்த காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ எழிலரசன்

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் காஞ்சி சங்கரமட மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரரை நேற்று சந்தித்து ஆசி பெற்றார்.

Update: 2024-05-09 09:04 GMT

காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்த காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெற்ற ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழாவில் காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்து கொண்டு இசை விழாவை தொடங்கி வைத்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள சனாதன சம்பிரதாய சங்கீத பாரதி அறக்கட்டளை சார்பில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஷியாமா சாஸ்திரிகள் இசை விழா நிகழ் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெற்றது.

மே.9 ஆம் தேதி ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தியை தொடர்ந்து காலையில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து பல்லக்கில் காமாட்சி அம்மன் விக்ரகமும்,ஷியாமா சாஸ்திரிகள் விக்ரகமும் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக மங்கல மேல வாத்தியங்களுடன் எடுத்து வரப்பட்டு சங்கர மடம் வந்து சேர்ந்தது.


சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் அதிஷ்டானம் முன்பாக இரு விக்ரகங்களும் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.அபிஷேகம் நடந்து கொண்டிருந்த போது 300க்கும் மேற்பட்ட சங்கீத வித்வான்கள் பங்கேற்று ஷியாமா சாஸ்திரிகளின் நவரத்ன கீர்த்தனைகளை பாடினார்கள்.

முன்னதாக இசை விழாவை தொடக்கி வைத்து காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசிய போது

ஒரு சொல்லை சொல்வதற்கும், மற்றொரு சொல்லை சொல்வதற்கும் இடைப்பட்ட நொடிகளை கணக்கிட்டது நமது கலாச்சாராம்.இசையின் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்பட்டிருக்கிறது, சங்கீதத்துக்கு மருத்துவக் குணங்கள் இருக்கிறது என்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள்,ஆராய்ச்சிகளும் செய்திருக்கிறார்கள்.

இசையின் மூலம் இறைவழிபாட்டை மேற்கொண்டிருக்கிறது நமது இந்திய தேசம்.சங்கீதத்தை கோயில்கள் மூலமாகவும் நம் முன்னோர்கள் வளர்த்திருக்கிறார்கள்.திருநெல்வேலி, மதுரை,சுசீந்திரம் கோயில்களில் உள்ள கருங்கல் தூண்களில் ஒவ்வொரு தூணும் ஒரு இசைசை ஒலிக்கும் வகையில் வடிவமைத்திருப்பது இதற்கு உதாரணமாகும் என்றார்.

இந்த இசை நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதற்கு முன்பாக காஞ்சி சங்கர மட மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை அவரது அறையில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.

Tags:    

Similar News