காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆங்கிலத்தை விட தமிழ் பாடத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் ஆங்கிலத்தை விட தமிழ் பாடத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

Update: 2024-05-10 05:18 GMT

தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பத்தாம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசு பொது தேர்வு நடத்தப்பட்டது. 

இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த சில தினங்களாக வெளியாகி வருகிறது. முதலில் மேல்நிலைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் இன்று காலை ஒன்பதரை மணியளவில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக் கல்வித் துறையின் உயர அலுவலர்களால் இணையதளத்தில் வெளியிடப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6665 மாணவர்களும், 7,164 மாணவிகளும் என 13 ஆயிரத்து 819 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை 87.55 சதவீதம் மாணவ மாணவிகள் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 

இந்நிலையில் தமிழ் பாடப்பிரிவில் தேர்வு எழுதிய 15, 785 மாணவ மாணவிகளின் 7240 மாணவர்களும் 7582 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 822 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் பாடப் பிரிவில் மட்டும் 963 பேர் தேர்ச்சி பெற தவறி உள்ளனர்.

ஆனால் ஆங்கில பாடப்பிரிவில் தேர்வு எழுதிய 15,785 நபர்களின் 15560 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பாடப் பிரிவில் 225 மாணவ, மாணவியர்கள் மட்டுமே தேர்ச்சி பெறவில்லை. 

தமிழ் பாடப்பிரிவில் 93.9% தேர்ச்சி பெற்றும் ஆங்கில பாடப்பிரிவில் 98.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதும் அதிர்ச்சி அளித்துள்ளது. ஆங்கிலத்தைக் காட்டிலும்,  தமிழ் பாடப்பிரிவு தேர்வு கடினமா அல்லது மாணவர்களுக்கு தழிழ் மொழி கடினமா என இந்த தேர்ச்சி முடிவுகளைப் பார்க்கும்போது தெரியவில்லை.

மாநில அளவில் பார்க்கும்போதும் தமிழ் பாடப் பிரிவில் 96 .85 சதவீதமும்,  ஆங்கில பாடப்பிரிவில் 99. 15 சதவீதமும் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News