உத்திரமேரூரில் நவராத்திரி விழா: 208 பெண்கள் பங்கேற்று விளக்கு பூஜை
உத்தரமேரூர் வடவாயிற்செல்வி துர்க்கை அம்மன் ஆலயத்தில் 208 பெண்கள் பங்கேற்ற மாபெரும் திருவிளக்கு பூஜை கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்தரமேரூர் நகரில் அமைந்துள்ள பழமையான பல்லவர் கால வடவாயிற்செல்வி எனப்படும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா 24 ஆண்டாக நடைபெற்று வருகிறது
8-வது நாளான துர்காஷ்டமி அன்று 208 பெண்கள் பங்கேற்ற மாபெரும் திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழா கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
கல்வி, திருமண பாக்கியம், மாங்கல்ய பலம், குழந்தைபேறு, குடும்ப நலம் செல்வவளம் கிடைக்கவும் நாட்டுமக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் விழாவில் பிரார்த்தனை செய்யப்பட்டது.இறுதியில் பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு குங்குமம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.