ஸ்ரீபெரும்புதூர் அருகே பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஓஎம் மங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-05-07 22:51 GMT

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த மூட்டைகளை குடிமை பொருள் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சட்டவிரோதமாக ஐந்து டன் ரேஷன் அரிசி கடத்தலுக்கு வைத்திருந்த போது பறிமுதல் செய்யப்பட்டது. இது  தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம், ஓ.எம்.மங்கலம் கிராமம், பஜனைகோயில் தெரு என்ற முகவரியில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில், திருப்பெரும்புதூர் வட்ட வழங்கல் அலுவலர், தனி வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருடன் அப்பகுதியில்  பஜனைகோயில் தெரு என்ற முகவரியில் வசித்து வரும், திரு.ஜானகிராமன் த/பெ.மாயன் என்பவரது வீட்டினை தணிக்கை செய்தனர்.

அந்த வீட்டின் ஒரு அறையில் சிப்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேற்படி சிப்பங்களில் இருந்து 83 சிப்பங்களில் சுமார் 4270 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டது.


மேலும், மேற்படி குழுவினர் அதே பகுதியில் பஜனைகோயில் தெரு என்ற முகவரியில் குமுதா க/பெ. முத்து என்பவரது வீட்டினை தணிக்கை செய்ததில், வீட்டின் படிகட்டின் அடியில் சிப்பங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேற்படி சிப்பங்களில் இருந்து 18 சிப்பங்களில் சுமார் 900 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி இருந்ததால் கைப்பற்றுகை செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட 5170 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசியினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், திருப்பெரும்புதூர் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News