தவறான மருத்துவ சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு என கூறி உறவினர்கள் சாலை மறியல்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த இரு நாட்களே ஆன குழந்தைக்கு சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2021-06-25 01:30 GMT

காஞ்சிபுரம்:

ராணிப்பேட்டை மாவட்டம் ,  பனப்பாக்கம் அடுத்த தென்றல் கிராமத்தை சேர்ந்தவர் கோபி . இவரது மனைவி மாலதிக்கு பிரசவம் வலி காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 3 தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். புதன்கிழமை மாலதிக்கு ஆண் குழந்தை  பிறந்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் குழந்தை அசைவின்றி கிடப்பதாக மாலதி மருத்துவரிடம் கூறியபோது குழந்தையை சோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டது என கூறியுள்ளனர். பாலூட்டிய பின் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென இறந்தது குறித்து உறவினர்கள் மருத்துவர்களிடம் கேட்டபோது, பாலூட்டும் முறையில் தவறு ஏற்பட்டு குழந்தை இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.

இந்நிலையில், போதிய கால அவகாசம் இன்றி குழந்தைக்கு பிறந்த அன்று ஓரு  ஊசியும்,  நேற்று ஒரு ஊசியும்  தொடர்ந்து ஊசி செலுத்தியதால் தான் குழந்தை உயிரிழப்புகள் காரணம் எனக்கூறி பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று இரவு 10 மணி அளவில் அரசு மருத்துவமனை முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், உங்கள் தரப்பு வாதங்களை எழுதி புகாராக அளியுங்கள். முறையான பிரேத பரிசோதனைக்கு குழந்தை உட்படுத்தப்படும் என உறுதியளித்த பின் பெற்றோர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவதாகவும், பல இன்னலுக்கு உள்ளாகி பிரசவிக்க வரும் மகளிரை உதாசீனப்படுத்தும் விதமாக பேசுவதும் மனதுக்கு வருத்தம் அளிப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News