மே தின நாளில் விடுமுறை அளிக்காத 151 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-05-02 07:12 GMT

மே தினத்தையொட்டி தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 151 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) ச.சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மே ஒன்றாம் தேதி அவர்களின் உழைப்பை வாழ்த்தும் விதமாக அன்று அவர்களுக்கு விடுமுறை விடுவது வாடிக்கை. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் மே ஒன்றாம் தேதி அனைவருக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவிப்பை வெளியிட்டது. 

இதனைத் தொடர்ந்து மே ஒன்றாம் தேதி விடுமுறை அளிக்காத நிறுவனங்களை தொழிலாளர் நலத்துறை ஊழியர்கள் கண்காணித்தனர் அதின் அடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் , தேசிய விடுமுறை நாளான மே மாதம் முதல் தேதியன்று கடைகள்,வணிக நிறுவனங்கள்,உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தோட்டங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.

இது தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக தெரிவிக்க வேண்டும்.அல்லது முறைப்படி தகவல் தெரிவிக்காமல் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியிருந்தால் அந்நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் மே தினத்தையொட்டி கடைகள்,நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 57 நிறுவனங்கள் மீதும் உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 94 நிறுவனங்கள் மீதும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News