பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தினர் 400 வது நாளாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
400 வது நாள் போராட்டத்தில் பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் கூட்ட இயக்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டி, மெழுகுவர்த்தி ஏந்தி 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய,மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது.
இதற்கான நிலம் பரந்தூர் , ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்கள் , குடியிருப்பு பகுதிகள் என சுமார் 4800 ஏக்கர் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அறிவிப்பு வெளியான நாள் முதலே அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் என அனைவரும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் கூட்டு இயக்கம் என அமைத்து கடந்த 400 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சி அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து தமிழக அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனும் கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 400 வது நாள் போராட்டத்தில் ஏகனாபுரம் கிராம பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என அனைவரும் கண்களில் கருப்பு துணி கட்டி , மெழுகுவர்த்தி ஏற்றி கையிலேந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மத்திய , மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி முழக்கங்கள் செய்து 15 நிமிடம் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அக் கிராம இளைஞர்கள் கூறுகையில், கடந்த 400 நாட்களாக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தும் அரசின் நிலைப்பாடு சற்றும் குறையவில்லை எனவும், மெழுகுவர்த்தி எப்படி உருகிக் கொண்டே போகிறதோ அதைப் போல தமிழக அரசின் மீதான நம்பிக்கையும் எங்களுக்கு குறைந்து கொண்டே வருகிறது.
பொது மக்களுக்கு விடியலை தருவதாக கூறிக்கொண்டு எங்கள் வாழ்வாதாரத்தை இருட்டாக்கி கொண்டே வருகின்றனர் என குற்றச்சாட்டு தெரிவித்தனர்.