சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பழங்குடியினருக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துடன் இணைந்து , பழங்குடியினர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது

Update: 2022-12-28 08:45 GMT

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் நடத்திய ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் நடத்திய ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் 

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துடன் இணைந்து , பழங்குடியினர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாமையும், பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட (Scheduled Tribe Component - STC) துவக்க விழாவினையும்  ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலத்தில் நடத்தியது .

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநரும் மாவட்ட வன அலுவலருமான ஆர்.கிருபாசங்கர்  முகாமினை துவக்கி வைத்து பேசுகையில் 'சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்து பழங்குடியினரின் 'ஊட்டச்சத்து குறைபாட்டை' போக்கிட தொடர்ச்சியான விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்திடும் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் முயற்சிகள் பாராட்டுக்குரியது. கரும்பு ஆராய்ச்சித் திட்டங்கள் மட்டுமின்றி 'பழங்குடியினர் மேம்பாட்டு செயல் திட்டத்தினையும் ' இந்நிறுவனம் சிறப்பாக செயல்படுத்தி வருவதுடன், தத்தெடுக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினர், நிறுவனத்தின் நிபுணத்துவத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முன் வரவேண்டும்.  பழங்குடியினருக்கு வானொலிப் பெட்டிகள் வழங்குவதோடு மட்டுமின்றி "வானொலி நிகழ்ச்சிகளுக்கான தினசரி அட்டவணையையும்"' அளிப்பது பாராட்டத்தக்க முயற்சியாகும் என அவர் குறிப்பிட்டார்.

கரும்பு இனப்பெருக்கு நிறுவன இயக்குனர் முனைவர் ஜி.ஹேமபிரபா தனது தலைமையுரையில், கல்வி மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கும், செழுமைக்கும் வழி வகுக்கும் என்பதை பழங்குடியினர் உணர்ந்து கொள்ள வேண்டும். பழங்குடியின குழந்தைகளுக்கான தொழிறகல்வி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பள்ளி செல்லும் பழங்குடியின குழந்தைகள், குறிப்பாக பெண்கள், ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாக இல்லாதவாறு கவனித்துக் கொள்ளுதல் அவசியம். இந்தியாவின் முன்மொழிவின் பேரில் ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டை 'சர்வதேச சிறுதானிய ஆண்டாக' அறிவித்துள்ளது.  சிறுதானியங்கள அதிக நார்ச்சத்து, புரதம் மற்றும் தாது உப்புகளை கொண்டிருப்பதால் , பழங்குடியினரின் உணவுமுறையில் சிறுதானியங்கள் , மீண்டும் ஒரு முக்கிய இடத்தைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும்  அவர் தெரிவித்தார் .

கரும்பு இனப்பெருக்கு நிறுவன முதன்மை விஞ்ஞானியும் இத்திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளருமான  முனைவர்      து .புத்திர பிரதாப் தனது அறிமுக உரையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமலை பகுதியைச் சார்ந்த இராமரணை, பெஜலட்டி, தடசலட்டி, இட்டரை, மாவநத்தம், காளிதிம்பம் ஆகிய கிராமங்கள் மற்றும் கடம்பூர் பகுதியைச் சார்ந்த பத்திரிப்படுகை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 450 பழங்குடியினர் இம்முகாமின் மூலம் பலனடைவார்கள். இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்தியதேனீக்களின் ரீங்கார சப்தமானது யானைகளை அச்சுறுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளதால் , ஒரு சோதனை முயற்சியாக, மனித-விலங்கு மோதலைத் தவிர்க்க, பழங்குடியினருக்கு இத்திட்டத்தின் மூலம் தேனீ பெட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது போன்ற விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பயிற்சிகள் நடத்துவதுடன், பழங்குடியினருக்கு பண்ணைக் கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ரேடியோ பெட்டிகள், ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பதற்கான விதைகள், பாக்கு விதைகள், திரவ வெல்லம் மற்றும் சிறுதானிய விதைகள் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார் .

முன்னதாக முகாமில் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது . சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு, தேனீ வளர்ப்பு, ஊட்டச்சத்துத் தோட்டம் அமைத்தல் மற்றும் சிறுதானிய சாகுபடி ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பழங்குடியின தலைவர்கள், கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவன, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் தமிழக வனத்துறை அதிகாரிகள், கலந்து கொண்டு பேசினர்.

Tags:    

Similar News