கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கடம்பூர் வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை உயிரிழந்தது.

Update: 2024-05-13 04:30 GMT

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக கடம்பூர் வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட எக்கத்தூர் கச்சப்பள்ளம் பகுதியில் கடம்பூர் வனத்துறையினர் கடந்த 9ம் தேதி ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சோர்வடைந்த நிலையில் படுத்து கிடந்தது.

உடனே இதுகுறித்து வனத்துறையினர் வன கால்நடை மருத்துவர் சதாசிவத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காட்டு யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்தனர். மேலும் மருத்துவ குழுவினரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு தொடர்ந்து யானையை கண்காணித்து வந்தனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2 மணி அளவில் அந்த காட்டு யானை உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து பெண் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சம்பவ இடத்திலேயே புதைக்கப்பட்டது.

காட்டு யானையின் உயிரிழப்பு வன ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News