ஈரோட்டில் வீடு புகுந்து மூதாட்டியிடம் கத்தியை காட்டி 17 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை
ஈரோட்டில் வீடு புகுந்து மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி 17 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
ஈரோட்டில் வீடு புகுந்து மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி 17 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கள்ளுக்கடை மேடு அண்ணாமலை பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் சாவித்திரி (வயது 70). இவரது கணவர் மணி இறந்துவிட்டார். சாவித்திரி அந்த பகுதியில் உள்ள வீட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு சாவித்திரி வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த 30 வயது மதிக்கத்தக்க 2 மர்ம நபர்கள் திடீரென மூதாட்டி சாவித்திரி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி உள்ளனர்.
இதனால் சாவித்திரி அரண்டு போய் பீரோ சாவியை அவர்களிடம் கொடுத்துள்ளார். அந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த தங்கச் செயின், மோதிரம், தோடு, கம்மல் என 17 பவுன் நகைகளை திருடி சென்றனர்.
மேலும் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரத்தையும் திருடி கொண்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர். நடந்த சம்பவம் குறித்து சாவித்திரி அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மூதாட்டியிடம் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.