இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் சவாலை ஏற்று நடுரோட்டில் குளித்த வாலிபர்

ஈரோட்டில் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ் சவாலை ஏற்று ஸ்கூட்டரில் நடுரோட்டில் குளித்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-05-29 13:03 GMT

நடுரோட்டில் ஸ்கூட்டரில் இருந்தபடி குளித்த வாலிபர் பார்த்திபன்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வெள்ளோட்டைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது26). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் அவரை பின்தொடர்பவர்கள் அளிக்கும் சவால்களை ஏற்று அதை நிறைவேற்றி வருகிறார். அதன்படி, பார்த்திபன் இரவு நேரத்தில் நடுரோட்டில் தூங்குவது, பச்சை மீன்களை சாப்பிடுவது, இரவில் கிணற்றில் குளிப்பது உள்ளிட்ட பல்வேறு சவால்களை செய்துள்ளார்.

இந்நிலையில், பார்த்திபனை நடுரோட்டில் குளிக்கும் படி அவரை பின்பற்றும்  ஒருவர் சவால் விட்டிருந்தார். அந்த சவாலை ஏற்று பார்த்திபன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நடுரோட்டில் ஸ்கூட்டரில் கால் வைக்கும் இடத்தில் இருந்த தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் டப்பில் இருந்து மக்கில் இருந்து தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றி குளித்தார். இதனை அவரை பின்தொடர்ந்து வந்த அவரது நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனையடுத்து, நடுரோட்டில் வாலிபர் குளிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது.

இது குறித்த தகவல் அறிந்ததும்  ஈரோடு டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள்  விசாரணை நடத்தினர். அதில், ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் சிக்னலில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக, மோட்டார் வாகன விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஸ்கூட்டரில் இருந்தபடி தண்ணீரை தலையில் ஊற்றி கொண்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இடையூறு செய்தும், இளைய தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டியாக செயல்பட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து, பார்த்திபனை ஈரோடு டவுன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து , மூன்று வழக்குகள் பதிவு செய்து ரூ.3,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News