கத்தியால் குத்தி மனைவி கொலை; தற்கொலைக்கு முயன்ற கணவனுக்கு சிகிச்சை

கோவையில், தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணிசெய்த மனைவியை, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-03 17:25 GMT

மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவர் வினோத். 

கோவையில் தனியார் மருத்துவமனையில் நர்ஸ்  பணிசெய்த மனைவியை, கணவனே சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்தார். தன்னையும் கத்தியால், குத்திக்கொண்டு கணவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை, சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் நான்சி, வயது 32. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும், கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. அவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது.  பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள, குப்புசாமி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் நான்சி, செவிலியர் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த வினோத், அவ்வப்போது நான்சியுடன் தகராறு செய்து, பிரச்சினையில் ஈடுபட்டு வந்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், தனது மனைவி நான்சிக்கும், மற்றொரு நபருக்கும் பழக்கம் இருப்பதாக சந்தேகமடைந்த வினோத், இன்று காலை வழக்கமாக நான்சி மருத்துவமனைக்கு பணிக்கு வந்தபோது, கத்தியுடன் பின்தொடர்ந்து வந்துள்ளார். பிற்பகல் 3 மணியளவில், நான்சி பணியில் இருந்த மகப்பேறு பிரிவிற்கு சென்ற அவர்,  தான் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து, நான்சியை சர மாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த நான்சி, அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் கொலை நடந்த சூழலில்,  நான்சியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு பரபரப்பாக ஓடிவந்த சக ஊழியர்களை பார்த்து அதிர்ச்சியடைந்த  வினோத், அங்கிருந்து தப்பியோட முயன்றார். 

அங்கிருந்த மருத்துவமனை காவலர்கள், அவரை ஓட விடாமல் தடுத்து, பிடித்தனர். அப்போது மனைவியை குத்தி கொலை செய்த அதே கத்தியால் குத்திக்கொண்டு, தற்கொலைக்கு வினோத் முயன்றார். இதில் காயமடைந்த அவரை, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவமனை ஊழியர்கள், நடந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த போலீசார்,  அங்கிருந்த சக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணவன், மனைவி இடையே ஏற்கனவே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததும், தன்னை விடுத்து, பிற ஆண்களுடன் நான்சி பழக்கம் வைத்ததாக வினோத்துக்கு சந்தேகம் ஏற்பட்டதால், இந்த கொலையை அவர் செய்ததும் தெரியவந்தது.

நடந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனையின் இருப்பிட மருத்துவர் சுந்தர்ராஜன், மருத்துவ வளாகத்தில் இந்த சம்பவம் நடந்தது. குடும்ப சண்டை காரணமாக, அவரது கணவர் நான்சியை கத்தியால் குத்திய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார். கொலை செய்த வினோத்திற்கு, மருத்துவமனையிலேயே சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறினார்.

மருத்துவமனை வளாகத்தில் நர்ஸ் நான்சி, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News