கோடநாடு வழக்கு தொடர்பாக 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.

Update: 2024-04-30 09:15 GMT

சிபிசிஐடி விசாரணை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட தனிப்படையினர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோடநாடு எஸ்டேட்டில் நீண்ட காலமாக ஓட்டுனராக பணிபுரிந்து வரும் ரமேஷ் மற்றும் ஜெயலலிதா கோடநாடு வரும் போது காய்கறிகளை கொடுத்து வந்த கோத்தகிரியை சேர்ந்த தேவன், கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் ரவிக்குமார் மற்றும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானின் வீட்டிற்கு அருகே வசித்த கார்களுக்கு நம்பர் பிளேட் பணி செய்யும் அப்துல் காதர் ஆகிய நான்கு பேரும் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலிசார் சம்மன் அளித்தனர். இதன்படி இன்று 4 பேரும் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News