பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

Update: 2024-05-04 02:45 GMT

சவுக்கு சங்கர் 

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். மேலும் பல்வேறு யூ டியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துகளை அவர் தெரிவித்து வருகிறார். குறிப்பாக திமுக அரசிற்கு எதிராக கருத்துகளை கூறி வரும் சவுக்கு சங்கர், அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

சமீப காலமாக சமூக வலை தளங்களில் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார் சவுக்குசங்கர். முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கர் கூறி வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றிற்க்கு சவுக்கு சங்கர் நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது. இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் சவுக்கு சங்கர் தங்கியிருப்பது மாநகர சைபர் கிரைம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி சென்ற சைபர் கிரைம் காவல் துறையினர், அங்கு தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று அதிகாலையில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவை சைபர் கிரைம் காவல் துறை அலுவலகத்திற்கு தேனியில் இருந்து காவல் துறையினர் அழைத்து வருகின்றனர். கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள சைபர் கிரைம் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News