கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

கோவையில் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த நாகராஜன் என்பவருக்கு சொந்தமான சொகுசு காருக்கு சொந்தமான காருக்கு தீ வைக்கப்பட்டது.

Update: 2024-04-29 10:24 GMT

 தீ வைத்து எரிக்கப்பட்ட கார்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜன். கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கோவை திருச்சி சாலையில் உள்ள ராமநாதபுரம் அருகே ஆறுமுக நகர் இரண்டாவது வீதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது காரினை வீட்டிற்கு முன்பாக நிறுத்துவது வழக்கம். அதன்படி நேற்றிரவு தனது காரினை வழக்கம் போல வீட்டிற்கு முன்பாக நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீட்டின் வெளியே வெடி சத்தம் கேட்டதை தொடர்ந்து, நாகராஜன் பதறியடித்து வெளியே ஓடி வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டிற்கு வெளியே நிறுத்தபட்டிருந்த நாகராஜனுக்கு சொந்தமான சொகுசு கார் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் காரில் பற்றி எரிந்த தீயை அனைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் தடுக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ராமநாதபுரம் காவல் நிலைய காவல் துறையினர் காருக்கு தீ வைத்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகராஜனின் வீட்டின் அருகில் வசிப்பவர் வீட்டில் சிசிடிவி பொருத்தபட்டிருந்த நிலையில் அது பழுதடைந்துள்ளதன் காரணமாக குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெருக்கமான குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் காருக்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News