கோவையில் அழகு நிலைய ஊழியரை, வெட்டி துண்டுகளாக்கிய கொடூரம் - ஆறு பேர் கைது

கோவையில், அழகு நிலைய ஊழியரை கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி குப்பையில் வீசிய ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-21 10:13 GMT

தலை உள்ளிட்ட இதர உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார், ஈடுபட்டனர்.

கோவை துடியலூர் அருகே வெட்டப்பட்ட கைகள், குப்பையில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆறு பேரை கைது செய்து, துடியலூர் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் தெரிவித்த பகீர் தகவல்களால், போலீசார் திடுக்கிட்டனர். இதையடுத்து,  துடியலூர் அருகே உள்ள கிணறில் கிடந்த உடல், தலை மற்றும்  பிளாஸ்டிக் கவரில் கட்டி வீசப்பட்ட கை ஆகிய உடல் பாகங்களை, தீயணைப்புத் துறையினர் மீட்டனர். வெட்டப்பட்ட கால்கள், வெள்ளலூர் குப்பை கிடங்கில் வீசப்பட்டதாக தெரிய வந்துள்ளது. 

கடந்த 15ம் தேதி காலை, துப்புரவு பணியாளர்கள் கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில், குப்பை தொட்டியில் கிடந்த கை குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார், இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட கைகளை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர்.

குப்பையில் கிடந்த கை, ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த பிரபு என்பவருடையது என தெரியவந்தது. இவர், கோவை சரவணம்பட்டியில் தங்கி, காந்திபுரம் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பணி செய்துள்ளார். கோவையில் தங்கி வேலை செய்து வந்த பிரபு, கடந்த 14ம் தேதி இரவு காணாமல் போனதாக, அவரது மனைவி காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அமுல் திவாகர், கார்த்திக் உள்ளிட்ட 6 பேரை தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பிரபுவின் உடலின் மற்ற பாகங்களை துண்டுகளாக வெட்டி மூன்று இடங்களில், அவர்கள் வீசியது தெரிய வந்தது. அதில் தலை, உடல் மற்றும் கையை பிளாஸ்டிக் கவரில் கட்டி, துடியலூர் அருகே இருந்த ஒரு கிணற்றில் வீசி உள்ளனர். மேலும், கால்களை வெள்ளலூர் குப்பை கிடங்கில் வீசியதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் உதவியுடன், இன்று துடியலூர் அருகே உள்ள கிணறில், பிளாஸ்டிக் கவரில் இருந்த உடல் பாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி, பரபரப்பாக காணப்பட்டது.

Similar News