நாக்கால் ஓவியங்கள் வரைந்து சாதனை: 20 வயது இளைஞருக்கு ஆட்சியர் பாராட்டு
நாக்கால் ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்த திருத்தங்கலைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் ஆட்சியரை சந்தித்து பாராட்டை பெற்றார்.
HIGHLIGHTS
இந்தியாவில் நீளமான நாக்கை உடையவர் மற்றும் தனது நாக்கால் பல்வேறு ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்த திருத்தங்கலைச் சேர்ந்த 20 வயதுடைய பிரவீன் என்பவர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி சந்தித்து பாராட்டை பெற்றார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருத்தங்கலைச் சேர்ந்த காளிராஜன், கமலா தம்பதியரின் மகன் பிரவீன் (20). இவர் இந்தியாவில் நீளமான நாக்கை உடையவர் என்பதற்கும், கடந்த நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தனது நாக்கால் இந்திய வரைபடத்தை 208 அடி அளவில் 49 மணி நேரத்தில் வரைந்து சாதனை படைத்துள்ளார். இதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, சந்தித்து பாராட்டை பெற்றார்.
மேலும் இவர் இதற்கு முன் தனது நாக்கினால் திருவள்ளுவர், மகாகவி பாரதியார், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் டாக்டர்.எம்ஜிஆர், டாக்டர்.மு.கருணாநிதி, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆகியோரின் உருவங்களை தனது நாக்கினால் பிரவீன் வரைந்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நிமிடத்தில் 219 முறை தனது நாக்கினால் மூக்கைத் தொட்டு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
மேலும் ஒரு நிமிடத்தில் 142 முறை தனது நாக்கினால் முழங்கையை தொட்டும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். தொடர்ந்து 247 தமிழ் எழுத்துக்களை ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் 26 வினாடிகளில் எழுதி இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அதோடு திருக்குறளில் 1330 குறள்களையும் தனது நாக்கினால் எழுதுவதற்கு முயற்சி எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இவரது சாதனைகளை பாராட்டி உலக அளவில் கின்னஸ் சாதனை படைப்பதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி, தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.