விருதுநகர் மாவட்டத்தில் நாளை மறுநாள் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர் தகவல்.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுவது தொடர்பாக அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:- விருதுநகர் மாவட்டத்தில், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை ஒரு லட்சம் பயனாளிகளை இலக்காக கொண்டு 1067 கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலமாக நடைபெறவுள்ளது.
கொரோனா நோய்த் தடுப்பில் தடுப்பூசி தான் பெரிய அளவில் பங்காற்றுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட 6 கோடியே 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபடுகிறது.கடந்த 30-ந் தேதியில் இருந்து நாளொன்றுக்கு 5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த 5-ந் தேதி வரை 3 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 824 பேர் (முதல் மற்றும் 2-ம் தவணை சேர்த்து) பயன் அடைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் வகையில், 'மெகா கொரோனா தடுப்பூசி முகாம்' வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் மட்டும் நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், இதுவரை (08.09.2021) முதல் தவணையாக 7,89,549 நபர்களுக்கும், இரண்டாவது தவணையாக 2,19,964 நபர்களுக்கும் ஆக மொத்தம் 10,09,513 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதன் மூலம் நமது மாவட்டத்தில் 52 சதவிகிதம் 18 வயதிற்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த 52 சதவிகிதத்தை 100 சதவிகிதமாக எட்டுவதன் மூலம் கொரோனா மூன்றாவது அலையில் இருந்து நமது மாவட்டத்தை பாதுகாக்கவும், உயிரிழப்பை தடுக்கவும் முடியும்.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளில் 1067 கொரோனா தடுப்பூசி முகாம்கள்; மூலமாக தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்தி கொண்டு, நமது மாவட்டத்தை கொரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்ரமணியன், உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.