நெல்லை மாவட்டத்தில் 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரவலாக மழை
நெல்லை மாவட்டத்தில், 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
HIGHLIGHTS
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த நவம்பர் 3ஆம் தேதி, ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 500 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நெல்லை மாவட்டத்தில் மழை ஓய்ந்து காணப்பட்டது. புறநகரின் ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது லேசான மழை பெய்தது.
இந்நிலையில், நான்கு தினங்களுக்குப் பிறகு இன்று நெல்லை மாநகரில் பல இடங்களில் திடீரென மிதமான மழை பெய்தது. ராதாபுரம், பணகுடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கனமழையும் பெய்தது. இதன் காரணமாக பணகுடி ஆலந்துரை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த 10 பேர் பத்திரமாக மீட்கபட்டனர். இன்று நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, வள்ளியூர் கல்வி கோட்டத்தில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கடந்த 24 மணி நேரத்தில், அதிக பட்சம் ராதாபுரம் பகுதியில் 39 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் பகுதியில் 10 மில்லி மீட்டர் மழையும் என மாவட்டம் முழுவதும் சராசரியாக 9.29 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மழை காரணமாக, மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 94.80 சதவீதமும், 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 48.06 சதவீதமும் நீர் இருப்பு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.