/* */

கொற்கை அகழாய்வில் கிடைத்த பொருட்கள்.. மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..

தூத்துக்குடி மாவட்டம், கொற்கை அகழாய்வில் கிடைத்த பொருட்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கொற்கை அகழாய்வில் கிடைத்த பொருட்கள்.. மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..
X

அகழாய்வு பொருட்களை ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ளது கொற்கை. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும், புகழ்பெற்ற துறைமுகபட்டினமாகவும் கொற்கை விளங்கி உள்ளது. கொற்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி நடந்து உள்ளது.

அரபு குதிரையை இறக்குமதி செய்தும், இங்கு விளையும் முத்துக்கள், மயில் தோகை உள்பட பல பொருட்களை ஏற்றுமதியும் செய்துள்ளனர். பெரிபுருஸ், தாலமி போன்றோர் இந்தத் துறைமுகத்தினை போற்றி புகழ்ந்து உள்ளனர். கொற்கை துறைமுகத்தினை டாக்டர் கால்டுவெல் ஆய்வு செய்து உலகிற்கு தெரிவித்தார்.

மேலை நாட்டு அறிஞர்கள் கொற்கையில் கிடைத்த காசுகளை திருநெல்வேலி காசு என்ற தலைப்பில் நூலாகவும் வெளியிட்டு உள்ளனர். கொற்கையை தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி 1966-67 ஆம் ஆண்டில் ஆய்வு செய்தார். மேலும், இந்த இடத்தில் கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் மாநில அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையில், ஆசைதம்பி, காளிஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

தற்போது, அந்த ஆய்வறிக்கை தயார் செய்ய இங்கு கிடைத்த பொருட்கள் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கொற்கை துறைமுகத்தை கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு தமிழக தொல்லியல் துறை சார்பில் கடல்சார் ஆய்வு தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரை கடல்வழியாக கடல்சார் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்பாக முன்கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வை தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.

அப்போது, சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் உடன் இருந்தனர்.

இந்த நிலையில், கொற்கையில் கடந்த ஆண்டு அகழாய்வில் கிடைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அகழாய்வு பொருட்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், கொற்கையில் உள்ள சுற்றுலா விளக்க கட்டிடத்தில் கடந்த வருடம் நடந்த அகழாய்வில் கிடைத்து பாதுகாப்பாக வைத்திருந்த அகழாய்வு பொருட்களை அவர் பார்வையிட்டார்.

தொடர்ந்து அருகில் இருந்த பழமையான வன்னிமரம், வெற்றிவேல் செழியநங்கை கோயில் என்றழைக்கப்படும் கண்ணகி கோயில் மற்றும் கொற்கை குளத்தினையும் ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டார். பின்னர், அக்கசாலை விநாயகர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை பார்வையிட்டு, அங்குள்ள கல்வெட்டுகள் குறித்து கோவில் பூசாரியிடம் கேட்டறிந்தார்.

அப்போது, அக்கா சாலை என்று அழைக்கப்படும் பாண்டிய மன்னரின் அச்சடிக்கும் இடத்தினை முறைப்படி அக்கசாலை என்று அழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

ஆய்வின்போது, ஏரல் வட்டாட்சியர் கண்ணன், ஆறுமுகமுகமங்கலம் வருவாய் ஆய்வாளர் முத்துசரவணன், கொற்கை கிராம நிர்வாக அலுவலர் காளிராஜ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சமூக சேவகர் காமராஜ் காந்தி, பெருமாள் பட்டர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 23 Nov 2022 3:50 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  2. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  3. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  4. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  5. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  6. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  7. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  8. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!