"பணப்பட்டுவாடா" வாக்குகளை எண்ணக்கூடாது -டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை ஆய்வு செய்ய 9பேர் அடங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு அமைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி.
HIGHLIGHTS
ஓட்டப்பிடாரம் தனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்பொழுது கூறுகையில், புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழகத்தில் 60 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தொலைக்காட்சி சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தனித்தொகுதியில் பொதுமக்களுக்கு பணப்பட்டுவாடா செய்து மக்களை ஊழல்படுத்தியுள்ளனர். வாக்காளர்களுக்கு அதிமுக மற்றும் திமுக தரப்பில் 1000 ரூபாய் 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தொகுதியில் 4-ம் தேதி வரை என்னை புன்முறுவலோடு வரவேற்ற பொதுமக்கள் அதன்பிறகு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதன் பின் முக பாவனையையே மாற்றி விட்டனர். ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது. இதுபோன்று ஒரு மோசமான தேர்தல் எங்கும் நடைபெறவில்லை. 60 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட திராவிட கட்சிகள் தேர்தலில் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்து மிகப்பெரிய அரசியல் பிழை செய்துள்ளனர். இதற்கு அவர்கள் என்றேனும் பதில் சொல்லியே தீர வேண்டும்.
எனவே, இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கக்கூடாது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 9 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் மறு தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் ஆணையம் பெயருக்கு மட்டுமே உள்ளது. அது செயல்படுவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.
இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா நடந்ததற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக செயல்பட்டுள்ளது. வாக்குரிமையை விலை கொடுத்து வாங்கி படுகொலை செய்து அதலபாதாளத்தில் புதைத்துவிட்டனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கையும் களவுமாக பிடித்து கொடுத்தால் புகார் அளித்தவர் மீது வழக்குப் பதியும் நிலை உள்ளது. எனவே இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் நாணயமற்ற தேர்தல் ஆணையமாக செயல்பட்டுள்ளது என்றார்.