தூத்துக்குடியில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் விஜயராகவன், வயோலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கடந்த 16 மாதங்களுக்கு பிறகு இன்று மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்ததால், மீனவர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். கூட்டத்தில் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
விசைப்படகுகளின் அத்துமீறலால் நாட்டுப்படகு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சனையில் மீன்வளத் துறையினர் சரிவர செயல்படாமல் உள்ளனர். அனைத்து விசைப் படகுகளையும் விதிமுறைப்படி முறையாக பதிவு செய்த பிறகே தொழிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்றனர். இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.