திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிளை மறித்து மர்ம கும்பலால் இளைஞர் கொலை
திருவாரூர் அருகே பைக்கில் வந்த வாலிபரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
திருவாரூர் அருகே காட்டூர் அகரதிருநல்லூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (32).இவரது மனைவியின் வீடு கானூரில் உள்ளது.இன்று மாலை இருசக்கர வாகனத்தில் மளிகை மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு நாகை தேசிய நெடுஞ்சாலை வழியாக கானூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வழியில் வாளவாய்க்கால் அருகே லிப்ட் கேட்ட பெண் ஒருவரையும் பைக்கில் ஏற்றி சென்று கொண்டிருந்தவரை இரு பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்தது.
அந்த கும்பல் கடாரங்கொண்டான் அருகே பைக்கை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே குமரேசன் உயிரிழந்தார். பைக்கில் வந்த பெண்ணுக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது.தகவலறிந்த தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த பெண்ணும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். முன் விரோதம் காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்த போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளது .
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்கள் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் நீடாமங்கலம் கடைவீதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடாரம் கொண்டான் பகுதியில் இன்று மீண்டும் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .