திருவாரூரில் பயன்பாடற்ற நிலையில் உள்ள உழவர் சந்தையில் அதிகாரிகள் ஆய்வு
திருவாரூரில் பயன்பாடற்ற உழவர் சந்தையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.
HIGHLIGHTS
மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி 1999 ஆம் ஆண்டு உழவர் சந்தை திட்டத்தை தொடங்கினார். இதனால் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகள்,பழங்கள்,தேங்காய் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தைத் திட்டம் தொடங்கப்பட்டது.
கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உழவர் சந்தை திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்படும் என அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்த உழவர் சந்தை பகுதியினை திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உழவர் சந்தையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு செய்யவேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.