குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், வெளியூர் வியாபாரிகள் நெல்லை விற்பதாக எழுந்த புகாரையடுத்து, குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றவியல் புலனாய்வு துறை தென் மண்டல எஸ்.பி தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சோதனை. இது வரை 100 டன் நெல் பிடிபட்டதாக கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேட்டி.
தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லை விற்பனை செய்வதற்காக தமிழக அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வெளியூர் வியாபாரிகள் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்வதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குடிமைபொருள் வழங்கல் மற்றும் குற்றவியல் புலனாய்வு துறை மதுரை மண்டல கண்காணிப்பாளர் எம்.பாஸ்கரன் தலைமையிலான போலீசார் தஞ்சாவூர் அருகே தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் அற்புதாம்பாள்புரம் பகுதியில் நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரிகளை சோதனையிட்டனர். இது குறித்து கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறுகையில், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை மட்டுமே வாங்க வேண்டும். வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்வதாக எழுந்த புகாரையடுத்து உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவில் இன்று சோதனை செய்வதாகவும், இதுவரை தமிழகம் முழுவதும் 100 டன் வியாபாரிகள் நெல் பிடிபட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 60 டன்னும் 11 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சோதனை செய்யப்படும் போது, நெல்லிற்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் லாரியுடன் பறிமுதல் செய்வோம் எனவும் தெரிவித்தார். இதே போல் தஞ்சை - திருச்சி சாலையில் புதுக்குடியிலும் திருவாரூர் மற்றும் நாகையிலும் சோதனை நடைபெற்றது.