புதுகை ஆர்டிஓ வீட்டில்13 மணி நேரம் நடந்த சோதனை: நகைகள்- ரொக்கம் பறிமுதல்.
தஞ்சாவூரில் நேற்று தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்றது. அதாவது சனிக்கிழமை அதிகாலை 3 மணி வரை நடந்தது
HIGHLIGHTS
13 மணி நேரம் நடந்த சோதனை. கணக்கில் வராத நகைகள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வருபவர் ஜெய்சங்கர். இவரது வீடு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையிலுள்ள கிருஷ்ணா நகரில் உள்ளது. இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது.
இதன் பேரில் தஞ்சை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பத்மாவதி மற்றும் போலீசார் தஞ்சாவூரில் உள்ள ஜெய்சங்கர் வீட்டுக்கு சென்றனர். வீட்டின் முன்புறம் உள்ள கேட்டை பூட்டி விட்டு சோதனையை தொடங்கினர். வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். இது தொடர்பாக ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து தஞ்சை மருத்துவ கல்லூரி சாலயில் ஜெயசங்கருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு கணக்கு வழக்குகள் சரியாக உள்ளனவா? என்றும் ஆய்வு செய்தனர். வீடு மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் நேற்று தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்றது. அதாவது சனிக்கிழமை அதிகாலை 3 மணி வரை நடந்தது.
முடிவில் கணக்கில் வராத ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 5 வாகனங்களுக்குரிய ஆவணம், வீட்டு ஆவணம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் சோதனையின் போது 100 பவுன் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஜெய்சங்கரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.