வட மாநிலத்தவர் பாதுகாப்பை உறுதி செய்ய உதவி எண் அறிவிப்பு
வட மாநில இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் வேலை பார்த்து வரும் வட மாநில இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு.
வட மாநில இளைஞர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் போலியான செய்திகள் பரவிய சூழலில், இந்த செய்திகளை உண்மை என நம்பி தமிழகத்தில் வேலை பார்த்து வரும் ஏராளமான வட மாநில இளைஞர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர்.
இதனால், தமிழகத்தில் வேலை செய்யும் ஆட்கள் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படும் சூழலில், வட மாநில இளைஞர்கள் யாரும் தமிழகத்தில் தாக்கப்படவில்லை. அது பொய்யான செய்தி என தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.
மேலும், சமூக வலைதளங்களில் போலியான செய்திகளை பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்வதற்காக தமிழக தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ள சூழலில், இதே விஷயத்தில் அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், தமிழகத்தில் வேலை பார்த்து வரும் மற்றும் வசித்து வரும் வட மாநிலத்தவர்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் வடமாநில இளைஞர்கள் மற்றும் வட மாநில குடும்பத்தினரை போலீசார் நேரில் சந்தித்து தாங்கள் அச்சமின்றி பணியாற்றவும் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனே அழைத்து கூறும்படி இலவச தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளனர்.
மேலும், வட மாநில இளைஞர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக கூறி போலியான செய்திகளை வெளியிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.