பாம்பன் ரயில்பாலத்தில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு.பரிதவிக்கும் பயணிகள்
பாம்பன் தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு. சரி செய்யும் பணியில் ஐஐடி குழுவினர் தீவிரம்.
HIGHLIGHTS
பாம்பன் தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு. சரி செய்யும் பணியில் ஐஐடி குழு தீவிரம்
பாம்பன் ரயில் பாலம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப்பு கடற்பகுதிகளில் தமிழகத்தோடு ராமேசுவரம் தீவை இணைக்கிறது. பாலத்தின் மத்தியில் பாக் ஜலசந்தி கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தூக்குப் பாலமும் உள்ளது. பாம்பன் ரயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் பல இடங்களில் சென்சார் கருவிகள் ஐ.ஐ.டி. மூலம் பொருத்தப்பட்டு உள்ளன. தூக்குப்பாலம் வழியாக ரயில்கள் செல்லும்போது எந்த ஒரு பாதிப்பு என்றாலும் உடனடியாக தெரிந்துவிடும். இந்நிலையில் சென்னை ரயில் தூக்குப்பாலத்தை கடந்து சென்ற போது வழக்கத்தைவிட பாலத்தில் அதிக அதிர்வுகள் இருப்பதாக தெரியவந்தது. தொடர்ந்து ஆய்வு செய்ததில் தூக்குப்பாலத்தில் உள்ள சென்சார் கருவியில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தூக்குப்பாலத்தில் என்ன பாதிப்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தற்காலிகமாக பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகளுடன் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி. குழுவினர் மீண்டும் பாம்பன் தூக்குப்பாலத்தை ஆய்வு செய்து பழுதான சென்சார் கருவி சரிசெய்யப்பட்ட பின்னர், மீண்டும் ரயில் பாலம் வழியாக பயணிகளுடன் ரயில் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். அதுவரையிலும் பயணிகளுடன் பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்து நடைபெறாது. ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அங்கிருந்து பயணிகள் அரசு பஸ்கள் மூலமாக ராமேஸ்வரத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள்.