தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய 7 துப்பாக்கி தோட்டாக்கள்
தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய 7 துப்பாக்கி தோட்டாக்கள். மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை.
HIGHLIGHTS
தனுஷ்கோடி கடற்கரையில் இன்று காலை 7 துப்பாக்கி தோட்டாக்கள் கொண்ட ப்ளாஸ்டிக் பாட்டில் ஒன்று கரை ஒதுங்கியது. தோட்டாக்களை கைப்பற்றிய மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பழைய தேவாலயம் எதிரே உள்ள வடக்கு கடற்கரை ஓரங்களில் இன்று காலை மீனவர் ஒருவர் மீன்பிடி சாதன கழிவுகளான கிழிந்த வலைகள், தெர்மாகோல், ப்ளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட கரை ஒதுங்கும் பொருட்களை சேகரித்துக் கொண்டிருக்கும் போது வெள்ளை நிற பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்து திறந்து பார்த்த போது அதில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததுள்ளது.
இதனையடுத்து இதுகுறித்து ராமேஸ்வரம் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மீனவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கியூ பிரிவு போலீசார் அந்த ப்ளாஸ்டிக் பாட்டிலை சோதனை செய்த போது அதில் 5.6 எம்.எம் நான்கு தோட்டாக்களும், 9 எம்.எம் இரண்டு தோட்டாக்களும், ஒரு டம்மி ப்ளாஸ்டிக் தோட்டா என மொத்தமாக ஏழு பயன்படுத்தப்படாத தோட்டாக்கள் இருந்தது. தோட்டாக்களை கைபற்றிய கியூ பிரிவு போலீசார் இராமேஸ்வரம் கடலோர காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைபற்றப்பட்ட தோட்டாக்கள் குறித்து மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையில் ஏற்பட்ட இறுதிக்கட்ட போரின் போது வெடிபொருட்கள், ராக்கெட் லாஞ்சர்கள், துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் இராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் தற்போது மீண்டும் பயன்படுத்தபடாத துப்பாக்கி தோட்டாக்கள் கரை ஒதுங்கியது மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைபற்றப்பட்ட தோட்டாக்கள் நடுக்கடலில் கடற்படை அல்லது கடலோர காவல் படையினர் பயன்படுத்த வைத்திருந்ததா என்ற கோணத்தில் கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகளிடமும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.