ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு சிறைக்காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு சிறைக்காவலை நீட்டித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
HIGHLIGHTS
ராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து கடந்த 12ம் தேதி காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் நள்ளிரவில் இரணைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 2 விசைபடகுகளையும், படகிலிருந்த ஜேம்ஸ், ராபின், முனீஸ்வரன், நெப்போலியன் உள்ளிட்ட 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து கிளிநொச்சி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீதான வழக்கு இன்று 2வது முறையாக கிளிநொச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லெனின்குமார் மீனவர்களை வரும் 28ம் தேதி வரை சிறைகாவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் பிப்.28ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.