நாமக்கல் மாவட்டத்தில் 35 மகளிர் உரிமைத்தொகை உதவி மையங்கள்: ஆட்சியர் ஆய்வு
![நாமக்கல் மாவட்டத்தில் 35 மகளிர் உரிமைத்தொகை உதவி மையங்கள்: ஆட்சியர் ஆய்வு நாமக்கல் மாவட்டத்தில் 35 மகளிர் உரிமைத்தொகை உதவி மையங்கள்: ஆட்சியர் ஆய்வு](https://www.nativenews.in/h-upload/2023/09/19/1781971-collector1.webp)
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மகளிர் உரிமைத்தொகை திட்ட உதவி மையத்தை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் வகையில் மகளிர் உரிமைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் 3 கட்டமாக பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டும், அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த எஸ்எம்எஸ், பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு கடந்த 18ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், எஸ்எம்எஸ் பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக, வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.
இதுகுறித்து விண்ணப்பதாரர்கள், மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 உதவி மையங்களும், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 3 உதவி மையங்களும், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 3 உதவி மையங்களும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 தாசில்தார் அலுவலகங்களில் தலா 3 வீதம் 24 உதவி மையங்களும் என மாவட்டத்தில் மொத்தம் 35 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் புகார்களை ஒருங்கிணைக்க சமூக பாதுகாப்பு திட்ட தனி சப்-கலெக்டர் தலைமையில், மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்களில் 35 தாசில்தார்கள், துணை தாசில்தார், உதவியாளர்கள் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மையங்கள், அரசு வேலை நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும்.
பொதுமக்கள் இம்மையங்களில் தங்களது ரேசன்கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் சென்று விண்ணப்பத்தின் நிலை குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். மகளிர் உரிமைத்தொகை உதவி மைங்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் சுமன், சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu