கொரோனா விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம்
நாகப்பட்டினத்தில் கொரோனா தொற்றைத் தடுக்க மாஸ்க் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்களுக்கும் அபராதம் விதித்து நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதை அடுத்து பொதுமக்கள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்பட வேண்டும் எனவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் தலைமையில் நாகப்பட்டினம், நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினர்.
இதில் நாகூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் நாகூர் கடைவீதியில் உள்ள ஹோட்டல்கள், கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிந்து உள்ளார்களா என்பதை நகராட்சி ஆணையர் ஏகராஜ் ஆய்வு செய்தார். அப்போது மாஸ்க் அணியாத நபர்களுக்கு 200 ரூபாய் அபராதமும், சமூக இடைவெளியை பின்பற்றாத நிறுவனங்களுக்கு 500 ரூபாய் அபராதமும் அவர் வசூலித்தார்.
மேலும் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தியதாகவும், கடைக்கு உரிமம் புதுப்பிக்காமல் வைத்திருந்ததாக 2 கடை உரிமையாளருக்கு ரூ. 5,000 அபராதம் விதித்தார். இதேபோல் அரசுப் பேருந்துகளில் பயணிகள் மாஸ்க் அணிந்துள்ளார்களா என்பதையும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.