மத்திய அரசு எடப்பாடி பக்கம்: முன்னாள் அமைச்சர் உதயக்குமார்

மத்திய அரசு எடப்பாடி பழனிச்சாமியை மட்டுமே அங்கீகரித்துள்ளது என, திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உதயகுமார், மதுரை மாவட்டம், டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த வன்முறைக்கு தி.மு.க. அரசு உடந்தையாக இருந்தது. ஓ.பி.எஸ்.சி.டம் பலகட்ட பேச்சுவார்த்தை மூத்த நிர்வாகிகள் நடத்தினர். அதை உதாசீனப்படுத்தினார். தொண்டர்கள், நிர்வாகிகள் கருத்தை கேட்காமல் தற்போது, அவர் அரசியலில் அனாதையாகி விட்டார். உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான் என, நிரூபிக்கும் வகையில் 75 மாவட்டங்களிலும் வரும் 25-ந்தேதி தி.மு.க. ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற உள்ளது. தேனியில் 26-ந்தேதி போராட்டம் நடைபெறுகிறது.
குடியரசு தலைவர் பிரிவு உபசார விழாவிலும், குடியரசு தலைவர் பதவி ஏற்பு நிகழ்விலும் அ.தி.மு.க.வின் ஒற்றை முகமாக, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக கலந்து கொள்ள. மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவாக உள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu