சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தெப்ப உற்சவம்
உத்திரமேரூரில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் மாசி மாத தெப்ப உற்சவம் வியாழன் முதல் சனிக்கிழமை வரை நடைபெறுகிறது.
HIGHLIGHTS
உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பஜார் பகுதியில் அமைந்துள்ளது சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில். இக்கோயில் முதலில் பல்லவரால் கட்டப்பட்டு, பின்னர் சோழ , பாண்டியர் விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டது.
மேலும் இத்திருக்கோயிலில் உள்ள சுந்தர வரதராஜ பெருமாளை தரிசித்தால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.
அவ்வகையில் உள்ள இத்திருக்கோயிலின் மாசி மாத தெப்ப உற்சவம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாம் நாள் தெப்ப உற்சவத்தில் எம்பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் திருக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை திருக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து திருக்குளத்தில் இருந்து மீண்டும் திருக்கோயிலை அடைந்த எம்பெருமானுக்கு சிறப்பு தீப தூப ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்களுக்கு சடாரி வைத்தும் , தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில் நடைபெறும் தெப்ப உற்சவத்தை காண உத்தரமேரூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
உத்திரமேரூரில் பாலசுப்பிரமணியசாமி திருக்கோயில் , வைகுந்த பெருமாள் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களும் மிகவும் புகழ் பெற்ற நிலையில் அதனையும் பக்தர்கள் தரிசித்து சென்று வருகின்றனர்