உபயோகமற்ற பேருந்து நிறுத்தத்தை அகற்றிய மாநகராட்சி
காஞ்சிபுரம் சங்கர மடம் அருகே பயனற்ற நிலையில் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அகற்றியது.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் சங்கர் மடம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பாழடைந்த பேருந்து நிலையம்,கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசத்தி பெற்ற பல கோவில்கள் உள்ளன.இதனால்,காஞ்சிபுரத்திற்க்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பலதரப்பட்ட மக்கள் வருகை புரிவதால் பிரதான சாலைகளில் வாகனங்கள் அதிகம் செல்லும் சூழல் ஏற்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது
பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் , காவல்துறை , போக்குவரத்து துறை என பல துறைகளில் இணைந்து காஞ்சிபுரம் நகரில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது.
இருப்பினும் திருமண நாள் மற்றும் விசேஷ நாட்களில் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிபவர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளதால் முக்கிய சாலைகளான காந்தி சாலை , வள்ளல் பச்சையப்பன் தெரு, காமராஜர் தெரு , விளக்கி கோயில் தெரு , பெரிய காஞ்சிபுரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நிலவுகிறது.
இதனைக் குறைக்கும் விதமாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், கடைகள் ஆகியவற்றை அவ்வப்போது அகற்றி மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு வருவதால் சாலைகளின் ஓரம் உள்ள ஆக்கிரமிப்புக்கள் தேவையற்ற கட்டிடங்களை இடிக்க ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெறப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே உள்ள 30 வருடங்களாக இருந்த பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த பேருந்து நிலையம் மற்றும் அருகே உள்ள இரண்டு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி மற்றும் கிரேன் இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது, இது முழுமையாக அகற்றப்பட்ட பிறகு அப்பகுதி சீரமைக்கப்பட்டு வாகனங்கள் அதிகளவில் நிறுத்தும் வகையில் செய்யப்பட உள்ளது. இதனால், சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவது தடுக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலும் பெரிதும் குறைக்கப்படும்.
இதுப்போன்று பல்வேறு இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
குறிப்பாக சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருந்தாலே பாதி நெரிசல் குறையும் என சமூக ஆர்வலர்கள் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது